

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுவரும் நிலையில், புதியவர்களும் வழிவிடுவதாகக் கூறி மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் விலகியிருப்பதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசில் சுகாதார அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் இருந்தவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள் என்பது எதைக் காட்டுகிறது?
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முழுத் தோல்வியை அடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது
ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லவே இல்லை என்று இவர்கள் நாள்தோறும் ஏன் பறைசாற்றினார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?" என்று பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது, கல்வித்துறை அமைச்சர், இணையமைச்சர் விலகலையும் அவர் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். கல்வித்துறை அமைச்சர் பதவி விலகுகிறார் என்றால், புதிய கல்விக் கொள்கையின் நிலை என்ன? மாநிலங்களும், அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும், அறிஞர்களும் எதிர்க்கட்சி அத்தனை ஆர்ப்பாட்டத்துடன் புதிய கல்விக் கொள்கையை பிரபல்யப்படுத்தினார்களே?! என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இப்போதுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மூடுவிழா செய்துவிட்டு. மாநிலங்களின் உரிமையை மதிக்கும், அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், சுதந்திரமான கலைகளுக்கு முக்கியத்துவம் தரும் கல்விக் கொள்கையை ஊக்குவிப்போம் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 43,733 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,59,920 ஆக குறைந்துள்ளது. இதுவரை, 36,13,23,548 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு திறம்பட செயல்படும்போது எதற்காக மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் விலக வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்றி அமைக்கப்பட்ட 43 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மீனாட்சி லெகி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மோடி அமைச்சரவையின் பலம் இப்போது 77 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் புதிய முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.