பாஜகவுக்கு நன்மைபயக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தால் நாட்டுக்கு என்ன பயன்? கமல்ஹாசன் கேள்வி

பாஜகவுக்கு நன்மைபயக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தால் நாட்டுக்கு என்ன பயன்? கமல்ஹாசன் கேள்வி
Updated on
1 min read

பாஜகவுக்கு நன்மைபயக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தால் நாட்டுக்கு என்ன பயன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும்.

ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?" என்று அடுத்தடுத்து இரண்டு ட்வீட்களைப் பதிவிட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு 2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றபின் மத்திய அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றமோ அல்லது விரிவாக்கமோ நடக்கவில்லை. இந்நிலையில் அமைச்சர்களின் செயல்பாடு, திறன், மாநிலங்களில் அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி விரும்பினார். அதனையொட்டி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்று வருகிறது.

புதிய அமைச்சரவையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குச் சென்ற ஜோதிர் ஆதித்யா சிந்தியா, மீனாட்சி லெகி ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மோடியின் புதிய அமைச்சரவையில் இன்று பதவியேற்கும் 43 பேரைச் சேர்த்து 77 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in