Last Updated : 07 Jul, 2021 06:42 PM

 

Published : 07 Jul 2021 06:42 PM
Last Updated : 07 Jul 2021 06:42 PM

முதல் தவணைச் சான்று கிடைக்காதவர்களுக்கும் உரிய காலத்தில் 2-ம் தவணை தடுப்பூசி: கோவை ஆட்சியர் உறுதி

முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கிடைக்காதவர்களுக்கும் உரிய காலத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் தற்போதுவரை மொத்தம் 9.57 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்களில் சிலர் கூறும்போது, “தடுப்பூசி மையங்களில் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை எழுதி வைத்துக்கொண்டனர். தடுப்பூசி செலுத்தி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. இன்னும், தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தி வரவில்லை. ‘கோவாக்சின்’ இரண்டாம் தவணை தடுப்பூசியை 4 முதல் 6 வாரங்களுக்குள்ளும், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை 12 முதல் 16 வாரங்களுக்குள் செலுத்திக்கொள்ள வேண்டும்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான விவரமே இன்னும் பதிவேற்றம் செய்யப்படாததால் குறிப்பிட்ட காலத்துக்குள் இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்று இல்லையெனில் வெளிநாடு செல்வோர் பயணம் மேற்கொள்ள இயலாது. அதேபோல, சில தனியார் அலுவலகங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆதாரம் கேட்கின்றனர்.

எனவே, இதில் தனிக் கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரங்களை உடனடியாகப் பதிவேற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

முதல் தவணைச் சான்று கட்டாயமில்லை

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும்போது, “அதிகப்படியான தடுப்பூசிகள் செலுத்தப்படும்போது, சில இடங்களில் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் தாமதம் இருக்கலாம். அவ்வாறு நிலுவையில் உள்ள விவரங்களை உடனடியாகப் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு உரிய காலத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும். எனவே, யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்று தெரிவித்தார்.

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறும்போது, “முதல் தவணை செலுத்தியதற்கான சான்று இருந்தால்தான் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த முடியும் என்று எந்த விதிமுறையும் இல்லை. எனவே, முதல் தவணை செலுத்தியற்கான சான்று இல்லாமல் வந்தாலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்தியதற்கான தகவல் பதிவேற்றத்தில் உள்ள தாமதம் சரிசெய்யப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x