Published : 07 Jul 2021 05:03 PM
Last Updated : 07 Jul 2021 05:03 PM

மேகதாது அணை விவகாரம்; கர்நாடகா அரசின் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும்: அமைச்சர் துரைமுருகன் உறுதி

மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, துரைமுருகன் இன்று (ஜூலை 07) வெளியிட்ட அறிக்கை:

"காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை சட்டத்துக்கு உட்பட்டு கர்நாடகா செயல்படுத்தும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களுக்கு அறிக்கை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், மேகதாது பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 4-ம் தேதி கர்நாடக முதல்வருக்கு எழுதிய பதில் கடிதத்தில், தமிழக விவசாயிகள் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெல் பயிர் செய்வதற்கு காவிரி நீரையே நம்பியிருக்கும் நிலையில், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். அதைச் செயல்படுத்தக் கூடாது எனக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதைத் தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்"

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x