Last Updated : 07 Jul, 2021 04:11 PM

 

Published : 07 Jul 2021 04:11 PM
Last Updated : 07 Jul 2021 04:11 PM

வயது வரம்பைத் தளர்த்தி காவலர் தேர்வை உடனே நடத்த வலியுறுத்தல்: புதுச்சேரி முதல்வரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு

வயது வரம்பைத் தளர்த்தி காவலர் தேர்வை உடனே நடத்த வலியுறுத்தி, புதுச்சேரி மாநில திமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள், முதல்வர் ரங்கசாமியை இன்று (ஜூலை 7) சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

‘‘புதுச்சேரியில் கடந்த பல ஆண்டுகளாக அரசுத் துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. புதுச்சேரியில் செயல்பட்டு வந்த பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாலும், இடம்பெயர்ந்து சென்றுவிட்டதாலும் தனியார் தொழிற்சாலைகளிலும் இளைஞர்களால் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் புதுச்சேரியில் 50 சதவீதத்துக்கும் மேலான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். குறிப்பாக அரசுத் துறைகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன.

காவல்துறையில் மட்டும் சுமார் ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேசமயம் புதுச்சேரி காவல்துறையில் போலீஸாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த பணிச்சுமையுடன் போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனாலும், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் போலீஸாரின் பணி மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப்பணியின்போது 100க்கும் மேற்பட்ட போலீஸார் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். இதனால் அச்சம் மற்றும் மனச்சுமைக்கு போலீஸார் ஆளாகியுள்ளனர்.

இதன் காரணமாக ரோந்துப் பணிகளிலும், குற்றங்களைக் கண்காணித்துத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் போலீஸாரின் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் காவலர் பணியிடங்களை நிரப்ப முயன்றபோதும் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்ததால் நிரப்ப முடியவில்லை. அதேசமயம் அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இளைஞர்களும், இளம் பெண்களும் கரோனா தொற்றுக் காலத்திலும் இடைவிடாது உடற்தகுதிக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் பயிற்சியால் அவர்கள் களைத்து, சோர்ந்துபோய் உள்ளனர்.

மேலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக காவலர் பணித் தேர்வு நடத்தப்படாததால், பல இளைஞர்கள், இளம்பெண்கள் காவலர் தேர்விற்கான வயதைக் கடந்துவிட்டனர். எனவே வயதின் காரணமாக நடைபெற இருக்கும் காவலர் தேர்வில் நாம் புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ? என்ற அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

காவலர் தேர்வை நடத்தாமல் இருப்பது அவர்களின் குற்றமல்ல. ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ காவலர் தேர்வை நடத்தியிருந்தால் காவலர் பணி மட்டுமே தங்களது எதிர்காலம் என நினைத்திருக்கும் இளைஞர்கள் காவலர் தேர்விற்கான வயதைக் கடந்து இருக்க மாட்டார்கள்.

எனவே, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காவலர் தேர்வு நடத்தாததைக் கருத்தில் கொண்டு, அவர்களும் பங்கேற்கும் வகையில் வயது வரம்பில் தளர்வு அளித்து காவலர் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும். தகுதியானவர்களைத் தேர்வு செய்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்".

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x