Published : 07 Jul 2021 12:58 PM
Last Updated : 07 Jul 2021 12:58 PM

திருவாரூரில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பை ஏற்று, முதல் முறையாக அவரது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு நேற்று (ஜூலை 06) மாலை வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்டு, திருவாரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இரவு தங்கினார்.

இந்நிலையில், இன்று காலை (ஜூலை 07) சன்னதி தெருவில் அவர் தங்கியிருந்த இல்லத்திலிருந்து நடைபயணமாகப் புறப்பட்டு, தெற்கு வீதி வரை நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் குறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்பொழுது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வாகனத்தை நிறுத்தி ஓடம்போக்கி ஆற்றில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், ஆற்றைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்வர், அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, 12 கோடி ரூபாய் மதிப்பில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் நலக் கட்டிடத்தை ஆய்வு செய்த முதல்வர், முதல் தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவம், ரத்த வங்கி உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தமிழகத்தில் 100% கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட காட்டூர் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் சான்றிதழை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பூண்டி கலைவாணன் வெள்ளியால் செய்யப்பட்ட செங்கோலைப் பரிசளித்தார். இதேபோன்று, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருக்குறள் எழுதிய பலகையைத் தமிழக முதல்வருக்குப் பரிசாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி. ராஜா, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் திருக்குவளைக்குத் தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x