Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM

தமிழகத்தில் நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகைகள் பயனாளிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை: சமூக நலத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை பயனாளி களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் பேசினார்.

தருமபுரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் இந்நிகழ்ச்சி யில் 150 பயனாளிகளுக்கு ரூ.80.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவிலும், செய்தியாளர் களிடமும் அமைச்சர் பேசியது:

தமிழகத்தில் பெண்கள் கல்வி யில் ஏற்றம் பெற, திருமண நிதி உதவித் திட்டம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ரூ.5000 நிதியுதவி வழங்கப்பட்டது. 2009-ம் ஆண்டில் உதவித்தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சியில் உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வந்த நிலையில் பின்னர் 8 கிராம் தங்கமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நிதி சமூக நலத்துறைக்கு அளிக்கப் படாத நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக திருமண உதவித் திட்டம் பயனாளிகளை முறையாக சென்று சேரவில்லை. இந்த வகையில் மட்டும் தமிழகத்தில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் தமிழகத்தில் நிலுவையில் உள்ளன.

திருமணம் செய்வோருக்கு உடனடியாக வழங்கப்பட்டிருக்க வேண்டிய இந்த உதவித்தொகை திட்டம் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த தகவலை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர் அனுமதியின் பேரில் நிலுவையில் உள்ள பயனாளி களுக்கும் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, 2 பெண் குழந்தைகள் இருந்தால் அந்தக் குழந்தைகள் நலன் காக்க வங்கியில் வைப்புத் தொகையாக அனுமதிக்கப்பட்ட 73 ஆயிரம் பயனாளிகளுக்கு அத்தொகை முதிர்வடைந்துள்ளது. இதையும் விரைந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவ மனையில் தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தை மையம் தற்போது இடவசதியின்மை காரணமாக தொண்டுநிறுவனம் மூலம் வேறிடத்தில் தற்காலிகமாக செயல்படுத்தப் படுகிறது. இம்மையம், விரைவில் மீண்டும் அரசு கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பேசினார்.

முன்னதாக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் ரூ.48 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும், அரசு விழாவுக்கு பின்னர் நல்லம்பள்ளி வட்டம் கோயிலூரில் செயல்படும் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் சிறப்பு இல்லங்கள் உள்ளடக்கிய வளாகத்தில் அமைந்துள்ள தொட்டில் குழந்தை மையத்தையும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், எம்எல்ஏ-க்கள் வெங்கடேஸ்வரன், கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தருமபுரி கோட்டாட்சியர் சித்ரா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ஜெமினி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுதவள்ளி, உதவி ஆட்சியர்(பயிற்சி) கெளரவக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) பூமா, மாவட்ட சமூக நலத்துறை அமைச்சர் நாகலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில் 510 பெண்களுக்கு ரூ.1.27 கோடி மதிப்பில் திருமண நிதி உதவித் தொகை, ரூ.1.92 கோடி மதிப்பில் 4,080 கிராம் தாலிக்கு தங்கம் என மொத்தம் ரூ.3.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்த இந்த விழாவில் மக்களவை உறுப்பினர் செல்லக்குமார், எம்எல்ஏ-க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் மதியழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x