Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM

ரூ. 6.4 கோடி நிதியில் அமைகிறது வராக நதியின் குறுக்கே உயர்மட்ட பாலம்: அதிகாரிகளுடன் அமைச்சர் மஸ்தான் ஆய்வு

செஞ்சி அருகே வராக நதியின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம்

ரூ. 6.44 கோடி மதிப்பீட்டில் செஞ்சி அருகே வராக நதியின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டப்பட உள்ளது. பாலம் அமைய உள்ள இடத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.

செஞ்சியில் இருந்து வடபாலை வழியாக மேல்மலையனூர் செல்லும் பிரதான சாலையில், வராக நதியில் இருந்து மழைநீர் செல்வதற்காக தரைப் பாலம் ஒன்று உள்ளது.

வெள்ளப் பெருக்கின் போதுஇந்த தரைப் பாலம் மூழ்கி விடுகிறது. இதனால் செஞ்சியில் இருந்து வடபாலை வழியே மேல்மலையனூர் செல்லும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்படுகின்றன.

இச்சிக்கலை சரிசெய்யும் பொருட்டு வட பாலை சாலை மேலச்சேரி செவலபுரையில் அமைந்துள்ள வராக நதியின் தரைப் பாலத்திற்கு மாற்றாக அதன் குறுக்கே ரூ. 6 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதையொட்டி அப்பகுதியில் அதிகாரிகளுடன் சென்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேற்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த உயர்மட்ட பாலம் சுமார் 100 மீட்டர் நீளத்தில், இரு வழித்தடமாக அகலப்படுத்தி கட்டப்பட உள்ளது. “இப்பணி மழை காலத்திற்கு முன் தொடங்கப்பட்டு, விரைந்து முடிக்க வேண்டும்” என்று அமைச்சர் மஸ்தான் நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x