Last Updated : 06 Jul, 2021 04:26 PM

 

Published : 06 Jul 2021 04:26 PM
Last Updated : 06 Jul 2021 04:26 PM

புதுச்சேரிக்கு ஆகஸ்ட்டில் அமித்ஷா வருகை: என்.ஆர்.காங் - பாஜக கூட்டணி அரசின் பொதுச் செயல்திட்டத்தை வெளியிட திட்டம்

புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட்டில் வரும்போது, என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் பொதுச் செயல்திட்டத்தை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது.

புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸில் 3, பாஜகவில் 2 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இவர்களுக்கு இதுவரை துறைகள் ஒதுக்கப்படவில்லை. பாஜக எம்எல்ஏக்கள் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவின் புதுவை மேலிடப் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டார். அவர் சுமார் ஓராண்டுக்கு முன்பாக புதுவையில் தேர்தல் பணியைத் தொடங்கினார். புதுவையில் முகாமிட்டு என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவும், பாஜகவின் வெற்றிக்கும் வியூகம் வகுத்தார்.

தேர்தலுக்குப் பிறகு பெங்களூருவில் நடந்த ஒரு விபத்தில் நிர்மல்குமார் சுரானாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும் புதுவை அரசியல் நிலவரங்களை அவ்வப்போது கேட்டறிந்து வழிநடத்தி வருகிறார். அமைச்சர்களின் துறைகள் ஒதுக்கீடு தொடர்பாகவும் முதல்வர் ரங்கசாமியுடன் பேசியுள்ளார்.

இந்த நிலையில் பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில், மாநிலத் தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய்.சரவணக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் இன்று பெங்களூரு சென்றனர். மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவைச் சந்தித்துப் பேசினர்.

சந்திப்பு தொடர்பாக பாஜக தரப்பில் உயர் தலைவர்களிடம் விசாரித்தபோது, "புதுச்சேரி அரசியல் நிலவரம் தொடர்பாகப் பேசினோம். என்.ஆர்.காங்-பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளதால், ஒரு பொதுச் செயல்திட்டத்தை உருவாக்க ஆலோசித்தோம்.

இதுபற்றி முதல்வரிடம் மேலிடப் பொறுப்பாளர் பேச அறிவுறுத்தினோம். ஆகஸ்ட்டில் புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும்போது கூட்டணி அரசின் பொதுச் செயல்திட்டத்தை வெளியிட நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளோம். தேர்தலில் பாஜக வெற்றிக்கு உழைத்த கட்சியினர், எம்எல்ஏக்களுக்கு வாரியத் தலைவர் பதவிகள் தருவது அவசியம் எனக் குறிப்பிட்டோம்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x