Published : 06 Jul 2021 03:50 PM
Last Updated : 06 Jul 2021 03:50 PM

10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக இன்று (ஜூலை 6) பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

ஜூலை 7-ம் தேதி

தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகள்

ஜூலை 8ஆம் தேதி

தெற்கு வங்கக் கடல், குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 9, 10ஆம் தேதி

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக் கடல் பகுதிகள்

ஜூலை 8 முதல் 10ஆம் தேதி வரை

கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

ஜூலை 6 முதல் 10ஆம் தேதி வரை

தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x