மேகதாது அணை பிரச்சினை: மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

மேகதாது அணை பிரச்சினை: மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு
Updated on
1 min read

டெல்லி சென்றுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை, மார்கண்டேய அணை குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சினை அரை நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளது. காவிரி நீர் பிரச்சினை இருக்கும்போதே கர்நாடகா தனது அத்துமீறலைத் தொடர்ந்து செய்து வருகிறது. காவிரி நீர்ப்பாதையில் மேகதாது அணை கட்டுவது தற்போது பெங்களூருவுக்குத் தண்ணீர் தேவை என்பதற்காக அணை கட்டுவது எனப் பல அத்துமீறும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்துத் தமிழகம் பல முறை மத்திய அரசிடம் முறையிட்டும் அதற்கான தீர்வு வரவில்லை. இந்நிலையில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் எனக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், ''மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது. இதனால் தமிழகம், கர்நாடகா என இரு மாநிலங்களுக்கும் பயன் உண்டு. மேகதாது அணை குறித்து இரு மாநிலப் பிரதிநிதிகளும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம்'' என எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள பதில் கடிதம் மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்து வரும் நிலையிலும் கர்நாடகா தன் நிலையிலிருந்து பின்வாங்காது என கர்நாடக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேச நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைச் சந்தித்துப் பேச நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் துரைமுருகன், இன்று காலை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைச் சந்தித்துப் பேசினார்.

அரைமணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. இந்தச் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆட்சேபம் தெரிவித்தார். 3 அம்சங்கள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரியவந்துள்ளது.

இச்சந்திப்பின்போது அமைச்சர் துரைமுருகனுடன் துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in