Last Updated : 06 Jul, 2021 03:12 AM

 

Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

திருத்தணி அருகே சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க சைக்கிளுடன் ஏர் கலப்பையை பொருத்திய விவசாயி

திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் சம்பங்கி மலர் தோட்டத்தில் சைக்கிளுடன் ஏர் கலப்பையை பொருத்தி, களை எடுக்கும் விவசாயி நாகராஜ்.

திருத்தணி

திருத்தணி அருகே விவசாயி ஒருவர் சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க, சைக்கிளுடன் ஏர்கலப்பையை பொருத்தி விவசாயம் செய்து வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். சம்பங்கிமலர் சாகுபடி செய்யும் விவசாயியான இவர், சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க ஆகும் செலவு மற்றும் நேரத்தை குறைக்கும் வகையில் சைக்கிளுடன் ஏர் கலப்பையை பொருத்தியுள்ளார்.

இதுகுறித்து, விவசாயி நாகராஜ் கூறியதாவது:

நானும், என் தம்பி அலெக்ஸ்பாண்டியனும் சேர்ந்து 3 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல், வெண்டை உள்ளிட்ட பயிர்களை பல ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறோம்.சமீபகாலமாக சம்பங்கி மலர் சாகுபடி செய்து வருகிறோம்.

100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு விவசாய தொழிலாளர்கள் செல்வதால், சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க ஆள் கிடைப்பதில்லை. ஆள் கிடைத்தாலும், ஓர் ஏக்கருக்கு 5 நாட்களில் களை எடுக்க40 ஆள் கூலியாக ரூ.6 ஆயிரம் அளிக்க வேண்டும். இவ்வாறு 8 முறை களையெடுக்க வேண்டும். களை எடுப்பதற்காக கூலி மட்டுமே ரூ.48 ஆயிரம் அளிக்க வேண்டும்.

சமீபத்தில் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு சைக்கிளின் ஒரு பகுதியில் ஏர் கலப்பையைப் பொருத்தி மலர்தோட்டங்களில் களை எடுப்பதைப் பார்த்தேன். அதேபோல் நாமும்முயற்சிக்கலாம் என யோசித்தேன்.

அதன்படி சைக்கிளின் ஒருடயரை கழற்றி விட்டு, அப்பகுதியில் ஏர் கலப்பையைப் பொருத்தி, கயிறு மூலம் இழுத்து களை எடுத்து வருகிறேன். இப்படி சைக்கிளை ஏர் கலப்பையோடு பொருத்த ரூ.3 ஆயிரம் செலவானது.

சைக்கிளில் ஏர் கலப்பையை பொருத்தி களை எடுக்க இருவர் மட்டுமே போதும். குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு ஓர் ஏக்கர் நிலத்தில் 5 மணி நேரத்தில் களை எடுத்து வருகிறேன். இதனால், செலவுத் தொகையும், நேரமும் மிச்சமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x