Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM
பிஏபி கால்வாயின் உடுமலை கிளை வாய்க்கால் பராமரிப்புக்காக ரூ.2.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஏபி பாசனத் திட்டம் மூலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுவதாக கூறப்படுகிறது. 3-ம் மண்டல பாசனம் நிறைவடைந்த நிலையில், தொகுப்பணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு எடுக்கப்படும் நீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிஏபி திட்டத்தின் பிரதான கால்வாய் உட்பட அனைத்து கிளை வாய்க்கால்களும் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பழுதடைந்துள்ளன. அவற்றை பராமரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், உடுமலை கிளை வாய்க்காலின் ஒரு பகுதியை பராமரிக்க மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது. டெண்டர் பணிகள் நிறைவடைந்து, விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே வாய்க்காலின் மேல் பகுதியில் பல இடங்களில் பராமரிப்பின்றி உள்ளதாகவும், குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை வாய்க்காலில் கொட்டுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருமூர்த்தி அணை செயற்பொறியாளர் கோபி கூறும்போது, ‘‘உடுமலை கிளை வாய்க்கால் பராமரிப்புக்கென மாநில அரசு ரூ.2.96 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. வாய்க்காலின் 16-வது கி.மீ. முதல் 23-வது கி.மீ. வரையான இடைவெளியில் பராமரிப்புப் பணி நடைபெறும். டெண்டர் முடிவுற்ற நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT