Last Updated : 01 Feb, 2016 08:47 AM

 

Published : 01 Feb 2016 08:47 AM
Last Updated : 01 Feb 2016 08:47 AM

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 4 ஆண்டுகளாகியும் முடிவடையாமல் உள்ள நடைமேடை விரிவாக்கப் பணிகள்

12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களை இயக்க முடியாத நிலை



*

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள சில புறநகர் ரயில் நிலையங்களில் நடைமேடை (பிளாட்ஃபார்ம்) விரிவாக்கப் பணி கள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடிவடையாத தால், 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் தற்போது 12 பெட்டிகளைக் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 9 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மேற்கண்ட இரு வழித்தடங்களிலும் உள்ள சில ரயில் நிலையங்களில் 12 பெட்டிகளை நிறுத்தும் அளவுக்கு நடைமேடை வசதி இல்லாததே இதற்கு காரணம்.

தற்போது அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கத்திலும் சேர்த்து நாள்தோறும் சராசரியாக 8 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அத்துடன் பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், வெளியூர் செல்லும் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்களை இயக்குவதற்காக கடந்த 2012-ம் ஆண்டில் ரூ.40 கோடி செலவில் நடைமேடை விரிவாக்கப் பணி களை தொடங்கியது. இதன்படி, சென்னை-அரக்கோணம் மார்க் கத்தில் திருமுல்லைவாயல், அண்ணனூர், இந்துக் கல்லூரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், திடீரென இப்பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.

இதுகுறித்து, பயணிகள் கூறும் போது, 2012-ம் ஆண்டு தொடங்கப் பட்ட இப்பணிகள் இதுவரை 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே முடிந்துள்ளன. அண்ணனூர், திரு முல்லைவாயல் ரயில் நிலையங் களில் நடைமேடை விரிவாக்கம் செய்வதற்காக இருபுறமும் சுவர் மட்டும் எழுப்பப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. இப்பணியை ரயில்வே நிர்வாகம் விரைந்து முடித்தால் 12 பெட்டிகளை கொண்ட ரயில்களை இயக்க முடியும். இதன் மூலம், ரயில்களில் கூட்ட நெரிசலும் குறையும்’’ என்றனர்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இத்திட்டத்துக்கான நிதி ஒரே சமயத்தில் ஒதுக்கப்படாமல் அவ்வப்போது ஒதுக்கப்படுவதால் இப்பணி நிறைவடையாமல் உள்ளது. மேலும், சில நிர்வாக காரணங்களாலும் இப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் விரிவாக்கப்பணி முழுமையாக செய்து முடிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x