Published : 05 Jul 2021 10:47 PM
Last Updated : 05 Jul 2021 10:47 PM

பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக்கூடாது எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி இன்று காலமானார். அவருக்கு வயது 84.

ஸ்டேன் சுவாமி திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார். இந்நிலையில்தான், மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பீமா கோரேகன் பகுதியில் 2017-ம் ஆண்டு இரு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்த்து.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் ஸ்டேன் சுவாமியைக் கைது செய்தனர்.

கடந்த அக்டோபர் 2020-ல் இவரை தேசிய புலனாய்வு மையம் கைது செய்தது.

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மே 29-ம் தேதியன்று மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா தொற்றும் உறுதியானது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

அவரது இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அவரது மறைவுச் செய்தி மும்பை உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுச் செய்திக்கு நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

அவரது மறைவு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல்.

அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x