யூடியூபர் மதன் ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி

யூடியூபர் மதன் ஜாமீன் மனு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

ஆபாச யூடியூப் தளம் நடத்தி பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதுடன், ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகம், புளியந்தோப்பு காவல் நிலையம், சைபர் கிரைம் பிரிவிலும், முதலமைச்சர் தனிப் பிரிவிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் புகார்கள் குவிந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில் யூடியூபர் மதன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், அவதூறாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பிய நிலையில் தலைமறைவாகி இருந்த மதன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவருடன் யூடியூப் நடத்திய பங்குதாரரான அவரது மனைவியை போலீஸார் கைது செய்தனர். மதனை தேடி வந்த நிலையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி தருமபுரியில் போலீஸார் கைது செய்தனர்.

ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், விசாரணை முழுமையாக முடிவடையவில்லை, பலர் நபர்களிடம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளதால் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது, எனவே ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.

மதன் தரப்பில், போதுமான எந்த ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. பெண்களை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாலும் பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in