Published : 05 Jul 2021 08:53 PM
Last Updated : 05 Jul 2021 08:53 PM

முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கார்த்தி, ரோகிணி சந்திப்பு: புதிய ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தக்கோரி ஆதரவு கேட்டனர்

சென்னை

ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் 2021 மசோதாவை எதிர்க்கும் திரையுலகினருக்கு ஆதரவளிக்கக் கோரி நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்.ராமசாமி, இயக்குநர்கள் சங்கத்தினர், நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தப்பின் நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் 2021 என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதில் உள்ள சட்டத்திருத்தங்கள் சினிமா தொழிலாளர்களையும், சினிமா எடுப்பவர்களின் வாழவாதாரத்தையே பாதிக்கும் புது சட்டத்திட்டங்கள் அதில் வந்துள்ளது. அதில் பாராட்டத்தக்க விஷயம் என்னவென்றால் வீடியோ பைரஸிக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதற்கு கீழ் முக்கியமாக எல்லோரும் அச்சப்படும் விஷயம் என்னவென்றால் சென்சார் சான்றிதழ் விஷயம்.

ஒவ்வொரு படமும் திரையிட வேண்டும் என்றால் சென்சாரில் திரையிடப்படவேண்டும், அதில் ஒரு குழு இருக்கும் அவர்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் கொடுப்பார்கள். அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதில் இன்னொரு குழு இருக்கும் அங்கு செல்ல்லலாம். அதிலும் பிரச்சினை இருந்தால் ட்ரிபியூனல் இருக்கும் அங்கு செல்லலாம். ஆனால் 2017 ஆம் ஆண்டு அந்த ட்ரிபியூனலையும் கலைத்து விட்டார்கள்.

தற்போது மத்திய அரசே அதற்கு அடுத்தக்கட்டமாக முறையீட்டுத்தளமாக இருக்கப்போகிறது. அப்படி இருக்கும்போது சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை எந்த தருணத்திலேயும் அரசாங்கம் ரத்து செய்யலாம் என்ற ஒரு சரத்தைக் கொண்டுவந்துள்ளார்கள். இது மிகப்பெரிய ஆபத்து. இனிமேல் எடுக்கப்பட போகும் படத்துக்கு மட்டுமல்ல ஏற்கெனவே எடுத்த படத்திற்கும் ஆபத்து.

இதை எப்படி செய்யப்போகிறார்கள் என்பதற்கான எந்த சரத்துமே இல்லை. ஒரு குழு அமைக்கப்போகிறார்களா?

இந்தக்குழுவில் சினிமா குறித்த விஷயம் அறிந்தவர்களா? என்கிற எந்த சரத்தும் இல்லை. மொத்தமாக எந்த நேரத்திலும் சினிமாவை ரத்து செய்யமுடியும் என்கிற சரத்து உள்ளது, இது கருத்து சுதந்திரத்தை மட்டுமல்லாமல் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் விஷயமாக உள்ளது.

இதை சினிமாத்துறையின் சார்பாக தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் சார்பாக நாங்கள் ஒரு பதிவை வைத்துள்ளோம், ஒரு கோரிக்கையை அரசிடம் வைத்துள்ளோம், அவர்களும் அதைப்பார்த்து அரசு சப்போர்ட் செய்வதாக கூறியுள்ளார்கள் எங்களுடைய உரிமைக்கான ஒரு குரல். இதை இத்தோடு நிறுத்தாமல் பெரிதாக எடுத்துச் செல்லவேண்டும் என்பது எங்கள் எண்ணம்”.

இவ்வாறு கார்த்தி பேசினார், பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

நேற்று முதல்வரை சந்தித்தீர்களே என்ன சொன்னார்?

கண்டிப்பாக உதவி செய்வதாக சொன்னார், ஏற்கெனவே இந்த விவகாரம் குறித்து நான் பார்த்துவிட்டேன், அரசாங்கம் இதற்கான எல்லா உதவியையும் செய்யும் என்று கூறினார்.

பாஜக சூர்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்களே?

எல்லோருக்கும் அவரவர்கள் கருத்து இருக்கும், அந்த கருத்துக்கான விஷயம் இருக்கும். அது சட்டரீதியான பிரச்சினை என்றால் அதை சட்ட ரீதியாக போராடிக்கொள்கிறோம்.

சட்டம் சம்பந்தமாக மத்திய அரசுக்கு ஆட்சேபனை பதிவுகளை அனுப்பி விட்டீர்களா?

அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு கார்த்தி பதிலளித்தார்


நடிகை ரோகிணி அளித்த பதில் வருமாறு:

“கலைப்படைப்பு மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று சொல்கிறோம். மக்களுடைய வார்த்தையைப் பேசும் கலைப்படைப்பு, அதை மக்கள் பிரச்சினையைப் பேசக்கூடாது என்று குரல்வளையை நெரிக்கும் மாதிரியான விஷயத்தை செய்கிறார்கள். பாதுகாப்பின்மை என்கிற விஷயத்தை நோக்கி கொண்டுச் செல்கிறார்கள்.

அதை செய்ய விடக்கூடாது என்பதும், கருத்துரிமை நமக்கு உள்ளது அந்த சுதந்திரத்தை பாதுகாக்கவும், ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்தப்பின்னர் எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறலாம் என்பது ஒரு பாதுகாப்பின்மை, எந்த அளவுக்கு சினிமாத்துறையை கடுமையாக பாதிக்கும் விஷயமாக இருக்கும் என்பதை எடுத்துச் சொன்னோம்”.

இவ்வாறு ரோகிணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x