Published : 05 Jul 2021 05:48 PM
Last Updated : 05 Jul 2021 05:48 PM

மனைவி என்று கூறி நடிகையைச் சட்டப்பேரவைக்கு அழைத்துச் சென்றுள்ளார்: மணிகண்டன் வழக்கில் எதிர்த்தரப்பு வாதம்

சென்னை

முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மனைவி எனக் கூறி நடிகையைச் சட்டப்பேரவைக்கு அழைத்துச் சென்றுள்ளார் என ஜாமீன் மனு மீதான விசாரணையில் நடிகை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வாதம் முடிந்த நிலையில் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை ஒருவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிப் பழகிய நிலையில் அவருக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்து பின்னர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றி விட்டதாகவும், இதுகுறித்துக் கேட்டபோது கொலைமிரட்டல் விடுத்து, தன்னுடன் பழகியபோது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்கக் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் தாம் கைது செய்யப்படுவோம் என அஞ்சி மணிகண்டன் தலைமறைவானார்.

பின்னர் பெங்களூருவில் அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி ஆன நிலையில், தற்போது ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தவறானவை. உண்மைக்குப் புறம்பானவை. திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை. எனக்கு புகார் அளித்தவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல, நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளவர். ஏற்கெனவே நான் திருமணமானவன் என்று அவருக்குத் தெரியும்.

இந்த நிலையில் எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. நான் கடன் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தைக் கேட்டபொழுது இந்தப் பிரச்சினை ஏற்பட்டது, மற்றபடி நான் நிரபராதி. எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன், “முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்குத் திருமணமாகி, குழந்தைகள் இருப்பது தெரிந்தே, ஐந்து ஆண்டுகள் அவருடன் நடிகை வசித்துள்ளார். அதனால் பாலியல் வன்கொடுமை என்ற கேள்வியே எழவில்லை. கருக்கலைப்புக்கு நடிகையே ஒப்புதல் அளித்துள்ளார். கருக்கலைப்புக்குக் கட்டாயப்படுத்தியதாகக் கூற முடியாது. எந்த அந்தரங்கப் படத்தையும் வெளியிடவில்லை.

புலன் விசாரணை முடிந்துவிட்டது. ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. காவலில் வைத்தும் விசாரிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகப் போவதில்லை. சாட்சிகளைக் கலைக்கப் போவதில்லை, ஆகவே ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

புகார்தாரரான நடிகை தரப்பில், “மனைவியை விவாகரத்து செய்துவிட்டுத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால் அவருடன் வாழத் தொடங்கினார். சட்டமன்றத்துக்கும் மனைவி என நடிகையை அழைத்துச் சென்றுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், அவரது ஒரு செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட போதும், நடிகைக்குப் படங்களும், குறுந்தகவலும் அனுப்ப பயன்படுத்தப்பட்ட செல்போன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. செல்வாக்கான நபர் என்பதால், சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x