மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் கொண்ட கட்டடங்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் கொண்ட கட்டடங்கள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையிலான வசதிகளும், கழிப்பறை வசதிகளும் இல்லாமல் எந்த அரசுக் கட்டடங்களும் கட்டக் கூடாது எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுக் கட்டடங்கள், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 32 மாவட்டங்களில் அரசுக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள அரசுக் கட்டடங்கள், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா? என்பது குறித்த விவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டனர்.

அனைத்து அரசுக் கட்டடங்களும், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இரண்டு மாதங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் இல்லாமல் எந்த அரசுக் கட்டடங்களும் கட்டக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இது சம்பந்தமான சட்ட விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனப் பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in