ஏ.கே.ராஜன் கமிட்டி; பாஜக வழக்கை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் இடையீட்டு மனு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஏ.கே.ராஜன் கமிட்டி; பாஜக வழக்கை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் இடையீட்டு மனு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய தமிழக அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜக தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள், கல்வியாளர் பிரின்ஸ், மாணவி தாக்கல் செய்த இடையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் பொதுநல வழக்கு ஒன்றைக் கடந்த வாரம் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு செயல்படுவதாகவும் பாஜக தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீட் விவகாரத்தில் குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியதுடன், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுக்க முடியாது என அறிவுறுத்தினர்.

வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, விசாரணை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி குழுவை எதிர்த்த பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவி நந்தினி ஆகியோர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், மாணவர்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை எனவும், ஓய்வுபெற்ற நீதிபதி குழுவின் ஆய்வு அறிக்கைகளை அரசிடமே அளிக்க உள்ளதால் இதில் யாருடைய உரிமைகளும் பாதிக்கப்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசியல் உள்நோக்கத்தோடு, கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த இடையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு ஜூலை 8ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் விரிவான விசாரணை தேவை எனத் தெரிவித்து வழக்கின் விசாரணையை ஜூலை 13ஆம் தேதி மதியம் 2:15 மணிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in