Published : 05 Jul 2021 01:14 PM
Last Updated : 05 Jul 2021 01:14 PM

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: சைக்கிளில் பேரணியாகச் சென்று எதிர்ப்பைக் காட்டிய பிரேமலதா

பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சைக்கிளில் பேரணியாகச் சென்று தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அண்மையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐக் கடந்தது. சென்னையிலும் சில நாட்களுக்கு முன்பே பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐக் கடந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூலை 05) பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில், அதாவது ஒரு லிட்டர் 93.91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்தும், மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சைக்கிளில் பேரணியாகச் சென்று தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x