Last Updated : 20 Feb, 2016 04:10 PM

 

Published : 20 Feb 2016 04:10 PM
Last Updated : 20 Feb 2016 04:10 PM

இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததால்: காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் கேள்விக்குறி? - விவசாயிகள் ஏமாற்றம்

ரூ.5,166 கோடியிலான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்காததால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சியால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மேலும், குடிநீர்ப் பிரச்சினை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறுகிறது.

எனவே, கடலில் கலக்கும் காவிரி நீரை தென் மாவட்டங்களுக்கு திருப்பிவிட வேண்டுமென ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, 7 மாவட்டங்களை உள்ளடக்கி 1958-ல் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.189 கோடிக்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. எனினும், இதுவரை இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதாக பலமுறை அறிவிக்கப்படுவதும், பின்னர் கைவிடுவதும் தொடர்கிறது. இந்நிலையில், மாயனூரிலிருந்து 256 கிலோமீட்டர் தூரத்துக்கு 20 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்க ரூ. 5,166 கோடிக்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. எனினும், நிதி ஒதுக்காததால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. இது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என மாநில அரசு வலியுறுத்தியும்கூட, மத்திய அரசு இந்த திட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், அதிமுக அரசின் 5-ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற இடைக்கால பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என்று விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மு. மாதவன் கூறியது: இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 7 மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். சுமார் 50 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்கும். மேலும், வெள்ளப்பெருக்கு காலத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்படுவதும் தடுக்கப்படும்.

திட்டம் மற்றும் வடிமைப்பு கோட்டப் பொறியாளர்கள் மூலம் சுமார் ரூ.5,166 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. நதி நீருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அறிவித்த அதிமுக அரசு, இடைக்கால பட்ஜெட்டில்கூட இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x