

மதுரையில் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்த குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த காப்பக நிர்வாகி கேரளாவுக்கு தப்ப முயன்றபோது போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர் மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே ’இதயம் டிரஸ்ட்’ என்ற பெயரில் முதியோர் காப்பகம் நடத்தினார். அதில் ஆதரவற்ற குழந்தைகளோடு, அவர்களது தாயாரும் தங்கியிருந்தனர். கடந்த மாதம் 13-ம் தேதி ஐஸ்வர்யா என்பவரின் ஒரு வயது ஆண் குழந்தை கரோனாவால் இறந்ததாகக் கூறி, காப்பக நிர்வாகி சிவக்குமார், காப்பக ஒருங் கிணைப் பாளர் கலை வாணி, ஊழி யர் மதர்ஷா ஆகியோர் நாடகமாடினர். இதனிடையே அதிகாரிகள் விசாரணை நடத்தி இஸ்மாயில்புரத்தில் கண்ணன் - பவானி தம்பதிக்கு விற்கப்பட்ட அக்குழந் தையையும், சக்கிமங்கலம் கல்மேடு பகுதியில் சகுபர்சாதிக், அனீஷ்ராணி தம்பதிக்கு விற்கப்பட்ட மற்றொரு 2 வயது பெண் குழந்தையையும் மீட்டு அவர்களின் தாயார்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 2 தம்பதிகள், இடைத்தரகர்கள் செல்வி, ராஜா, காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிவக்குமார், மதர்ஷாவை தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில், காப்பக நிர்வாகி சிவக்குமார், மதர்ஷா ஆகியோர் தேனி வழியாக கேரளாவுக்கு தப்பிச் செல்வதாக தனிப்படை க்கு தகவல் கிடைத்தது. அதன்படி தேனி மாவட்டம், போடி அருகே கரட்டுப்பட்டி விலக்கில் நடத்திய வாகனச் சோதனையில் சிவக்குமார் சென்ற காரை வழிமறித்து தேனி போலீஸார் கைது செய்தனர்.
நேற்று மாலை தல்லாகுளம் போலீஸாரிடம் அவர்கள் ஒப் படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.