மதுரை எய்ம்ஸ் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? எம்.பி. சு.வெங்கடேசனுக்கு மத்திய அமைச்சர் விரிவான பதில்

மதுரை எய்ம்ஸ் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? எம்.பி. சு.வெங்கடேசனுக்கு மத்திய அமைச்சர் விரிவான பதில்
Updated on
2 min read

மதுரை எய்ம்ஸ் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற இயன்ற எல்லா முயற்சிகளையும் அமைச்சகம் மேற்கொள்ளும் என்று மத்திய சுகாதார இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களவை எம்.பி., சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் கடிதம் மூலம் பதில் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மூன்று ஆண்டுகளாக தாமதம் ஆவது பற்றி பிப்ரவரி 11, 2021 அ‌ன்று நாடாளுமன்றத்தில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை, விதி எண் 377 ன் கீழ் எழுப்பி இருந்தேன்.

அதற்கு ஜூன் 23, 2021 தேதியிட்டு ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் அசுவினி குமார் சௌபே பதில் (கடித எண் D. O. No. H-11016/05/2021- PMSSY - III) அனுப்பியுள்ளார்.

கடிதத்தின் சாரம் வருமாறு:

* டிசம்பர் 2018 ல் அன்று மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ 1264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் அமைக்கப்பட ஒன்றிய அமைச்சரவை முடிவெடுத்தது.

* ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) கடன் வாயிலாக திட்டத்தை அமலாக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான முன் ஆயத்த ஆய்வு ஒன்று ஜெய்கா (JICA) குழுவால் பிப்ரவரி 2020 ல் நடத்தப்பட்டது. மதுரைக்கும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் மற்ற எய்ம்ஸ் மருத்துவ சேவைகளையும் நேரில் பார்வை இட்டார்கள்.

* 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய் பிரிவு ஒன்றையும் மற்றும் சில சேவைகளையும் திட்டத்தில் இணைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

* புதிய திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ 1977.80 கோடிகள் எனவும் அதில் ரூ 1627.70 கோடிகள் 'ஜெய்கா' கடன் வாயிலாகவும் மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் திட்டச் செலவினம் ஈடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த திருத்திய மதிப்பீடு அடிப்படையில் 26.03.2021 அன்று 'ஜெய்கா ' உடன் கடன் உடன்பாடு கையெழுத்தானது.

* இதற்கிடையில் முதலீட்டுக்கு முந்தைய பணிகள் எய்ம்ஸ் அமைவிடத்தில் 90% முடிக்கப்பட்டுள்ளது. அதில் எல்லைச் சுவரும் அடக்கம்.

* திட்ட அமலாக்க குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ் க்கு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் ( நிர்வாகம்), கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* திட்ட நிர்வாக ஆலோசகரை (Project Management Consultant) நியமனம் செய்வதற்கான உலகளாவிய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற இயன்ற எல்லா முயற்சிகளையும் அமைச்சகம் மேற்கொள்ளும் என்ற உறுதிமொழியும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எம்.பி. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in