

கடலூர் அருகே போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்க தேசத்தினரை புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், மத்திய புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் மாதவன், ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திரன் ஆகியோர் இன்று ஒரு குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்தபோது, அந்த வீட்டில் 3 ஆண்கள், 2 பெண்கள், 3 வயது குழந்தை இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்திய புலனாய்வுப் பிரிவினர், பின்னர் வீட்டில் சோதனை நடத்தியதில், பல போலியான ஆவணங்களும், வெளிநாட்டினருடன் தொடர்ந்து பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வங்கதேசத்தினர் என்றும், தாங்கள் மேற்கு வங்கம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் என்று அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்ததும் தெரியவந்தது.
அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தங்கியிருந்த போதிலும் அப்பகுதியில் யாரிடமும் பேசியதில்லையாம். வெளியிலும் வருவதில்லையாம்.
அதனால் அந்த தெருவில் உள்ள ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதே தெரியாது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
பின்னர் அவர்களை வேறு இடத்திற்குச் சென்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவர்கள் அங்கு தங்குவதற்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்த நபரைையும் தேடி வருகின்றனர்.