Published : 02 Jul 2021 06:24 PM
Last Updated : 02 Jul 2021 06:24 PM

மின் கணக்கீட்டிற்கு இனி ஸ்மார்ட் மீட்டர்; இழப்புகளை ஈடுகட்ட நடவடிக்கை: மதுரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மதுரை

மின்வாரியத்தில் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய மின் கணக்கீட்டிற்கு ஸ்மார்ட் மீட்டர்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மதுரை மண்டல மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்துப் பேசினார்.

வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, திண்டுக்கல் எம்.பி செல்வராஜ், ராமநாதபுரம் எம்பி நவாஷ்கணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், தமிழரசி, மாங்குடி, காமராஜன், சரவணகுமார், காதர்பாட்ஷா, முருகேசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் மண்டல வாரியாக உதவிப் பொறியாளர்கள் முதல் மண்டலப் பொறியாளர்கள் வரை பங்கேற்கும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன் 9 மாதங்களாக மின்வாரியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவில்லை. இந்த பராமரிப்புப் பணிகளை 10 நாட்களில் இருந்து போர்க்கால அடிப்படையில் நடத்த முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அப்பணிகள் தற்போது நிறைவு பெறுகிறது.

இன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மின்நுகர்வோர் சேவை மையத்தில் வரக்கூடிய அழைப்புகள், கோரிக்கைகள் மற்றும் புகார்கள் பற்றி ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டிற்கான மீட்டரை ஸ்மார்ட் மீட்டராக மாற்ற முடிவு செய்துள்ளோம். உற்பத்தியாகக் கூடிய மின்சாரத்திற்கும், விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கும் இடைவெளி மிக அதிகமாக உள்ளது. இதனால், மின்வாரியத்திற்கு ரூ.900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதை சரி செய்வதற்கு ஸ்மார்ட் மீட்டர்தான் சரியாக இருக்கும். வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வணிகத்திற்கும் தனித்தனி மீட்டர் உள்ளது. விவசாயத்திற்கு மட்டும் மீட்டர் இல்லாமல் உள்ளது. அதனால், கடந்த சில ஆண்டாக தவறுகள், நிர்வாகக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

அதனால், மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் சரி செய்வதற்கும், இழப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வகையில் சரி செய்யலாம் என்பது ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இனி மின்கம்பங்களுக்கு மின்வாரியமே பொறுப்பு..

அமைச்சர் செந்தில்பாலாஜி மேலும் கூறுகையில், ‘‘கிராமப்புறங்களில் புதிய மின் இணைப்பு, மின்மாற்றிகள் மாற்றவும், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கு அமைக்கப்படும் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அமைப்பதற்கான செலவினங்களை மின்வாரியத்தால் செய்ய முடியாதநிலை ஏற்பட்டது.

அதை பொதுமக்களிடமே மின்வாரியம் இதுவரை வசூலித்து வந்தது. அதை மாற்றி, இதுபோன்ற பணிகளுக்காக ஒரு பைசா கூட பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால், தற்போது அந்த செலவினங்களை மின்வாரியமே ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x