Published : 02 Jul 2021 06:11 PM
Last Updated : 02 Jul 2021 06:11 PM

அண்ணா சாலையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் திடீர் சாலை மறியல்: கார்களை சாலையின் குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு

வாடகை கட்டணத்தை உயர்த்தி தரவேண்டும், கமிஷன் தொகையை குறைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசாலை எல்.ஐ.சி அருகே கார்களை குறுக்கே நிறுத்தி கால் டாக்சி ஓட்டுநர் நடத்திய மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் அதிகம் பாதிக்கப்படுவது லாரி, வாடகை வேன், ஆட்டோ, கால்டாக்சி என வாகனங்களை நம்பி தொழில் செய்வோரே. அதிலும் தினம் தினம் உயரும் பெட்ரோல் டீசல் விலையும், மறுபுறம் கரோனா பொதுமுடக்கமும், விலைவாசி உயர்வும் பழைய வாடகை கட்டணமும் தங்களை அதிகம் பாதிக்கிறது என இவர்கள் தொடர்ந்து தங்களின் கோரிக்கைக்காக குரல் எழுப்பி வருகின்றனர்.

சென்னையில் ஆட்டோக்களுக்கு இணையாக ஓலா, ஊபர், ஃபாஸ்ட் டிராக் கால்டாக்சிகள் ஓடுகின்றன. நிதி நிறுவனங்களில் லோன் போட்டு வாகனங்களை வாங்கி வாடகைக்கு ஓட்டும் ஓட்டுநர்கள் தங்கள் வருமானத்துக்கும் வாகன பரமாரிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இன்ஷுரன்ஸ், சாலைவரி உள்ளிட்ட கட்டணம் காரணமாக பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், ஒருபுறம் விலைவாசி உயர்வு, பெட்ரோல்டீசல் விலை உயர்வு, மறுபுறம் அதே பழைய வாடகை கட்டணம் காரணமாக தொழிலில் பலத்த நஷ்டமடைவதாக கால்டாக்சி ஓட்டுநர்கள் கூறிவருகின்றனர்.

தங்கள் கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப அவ்வப்போது வாடகை கட்டண விலையை உயர்த்தி தர வேண்டும், ஓலா, ஊபர் நிறுவனங்கள் கமிஷன் தொகையை குறைவாக பிடிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வைத்து கடந்த சில நாட்களாக கால் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன் பல்லாவரத்தில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினர், இந்நிலையில் இன்று திடீரென சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி அருகே சாலையின் குறுக்கே நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தி சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து கேட்டவர்களிடமும், படம் எடுத்த பத்திரிக்கையாளர் வாகனத்தையும் மோதி கீழே தள்ளினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வாகனங்கள் ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதில் சிலர் கோஷமிட்டப்படி அண்ணா சாலையில் சென்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சாலையில்குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை ஓட்டுநர்கள் எடுத்துச் சென்றனர். அப்படியும் எடுக்கப்படாமல் குறுக்கே நின்ற வாகனங்களை போலீஸார் ஒன்று சேர்ந்து தள்ளி ஓரங்கட்டினர். இதனால் ஒரு மணிநேர போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்தது. போராட்டம் மறியல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எல்.ஐ.சி அருகே பதற்றம் காணப்பட்டது. பின்னர் போலீஸார் நடவடிக்கையால் போக்குவரத்து சீரானது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x