Published : 02 Jul 2021 03:49 PM
Last Updated : 02 Jul 2021 03:49 PM

10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ்

சென்னை

வன்னியர் சமுதாயத்துக்கான 10.5 % உள் ஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், மனு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை கேட்டபின்னரே முடிவெடுக்க முடியும் என நோட்டீஸ் பிறப்பித்தது.

தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்துக்கு எதிராக சென்னையை சேர்ந்த சந்தீப் குமார் மற்றும் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகலாமே? என கேள்வி எழுப்பியதோடு, சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைக்கலாம் என்றிருக்கிறோம் எனக் கூறினர்..

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, ஏற்கனவே இதே கோரிக்கையுடனான மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவே வழக்கை மாற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்தார்.

மேலும், வன்னியர் சமுதாயத்துக்கு 10.5% உள்ஒதுக்கீடு செய்யப்படுவதால் குறிப்பிட்ட சமுதயத்தினருக்கு மட்டுமே வேலை & கல்வியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் எனவும், மேலும் உரிய கணக்கீடு இல்லாமல் 10.5% ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதத்தை முன் வைத்தனர்.

ஆனால், நீதிபதிகள் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து தமிழக அரசின் கருத்தையும் அறிந்த பின்னரே முடிவு செய்ய முடியும், எனவே தற்போதைய நிலையில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தோடு, இந்த மனுக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.

மேலும், ஏற்கனவே இதேவிவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவோடு இணைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x