சிவகங்கையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து முன்னாள் அமைச்சரின் உறவினர் கட்டிய வணிக வளாகம் இடிப்பு

சிவகங்கையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து முன்னாள் அமைச்சரின் உறவினர் கட்டிய வணிக வளாகம் இடிப்பு
Updated on
1 min read

சிவகங்கையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டிய முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் உறவினரின் வணிக வளாகக் கட்டிடத்தை இடித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றினர்.

சிவகங்கையில் மேலூர் சாலையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 142 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ரூ.10 கோடி மதிப்புள்ள 9.58 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினரான சரவணன் என்பவர் ஆக்கிரமித்ததாக திமுக நகரச் செயலாளர் துரைஆனந்த் முதல்வரின் தனிப்பிரிவு, அறநிலையத்துறை அமைச்சருக்குப் புகார் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் ஜூன் 19-ம் தேதி அறநிலையத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, அங்கு கட்டப்பட்டு வந்த வணிக வளாகக் கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்தனர். அதைத் தொடர்ந்து கட்டிடத்தை ஜூன் 30-ம் தேதிக்குள் இடித்து அகற்ற வேண்டுமென சரவணனுக்கு அறநிலையத் துறை சார்பில் ஜூன் 23-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கிடையில் திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் உறவினரின் கட்டிடத்தை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். உரிமையாளர் அகற்றவில்லை என்றால், அறநிலையத் துறை அதிகாரிகளே அகற்றி, அதற்குரிய தொகையைச் சம்பந்தப்பட்டவரிடம் வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நோட்டீஸுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் இன்று அறநிலையத் துறை அதிகாரிகள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் உறவினருக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வணிக வளாகக் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in