Published : 02 Jul 2021 01:58 PM
Last Updated : 02 Jul 2021 01:58 PM

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்குக: ஈபிஎஸ் வலியுறுத்தல்

ஈபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஜூலை 02) வெளியிட்ட அறிக்கை:

"ஜெயலலிதா அரசு கடந்த ஆண்டு குறித்த நாளில், அதாவது ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டதைத் தொடர்ந்து, டெல்டா விவசாயிகள் வேளாண் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு பயனடைந்தனர். அதுபோல, இந்த ஆண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகள், விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்ந்த ஜெயலலிதாவும், தொடர்ந்து அதிமுக அரசும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள், உதவிகளை அளித்து விவசாயிகளின் வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றியது.

1. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் முறைப்படுத்தும் குழு அமைத்து, 50 ஆண்டுகால காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு.

2. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு.

3. குடிமராமத்து திட்டத்தில் சுமார் 1,132 கோடி ரூபாயில், சுமார் 5,586 நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. மேலும், டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிவரை கால்வாய்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. மேலும், டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிவரை கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால், குறித்த காலத்திற்குள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாசன பரப்புகளுக்கும் காவிரி நீர் சென்றடைந்து, விவசாயிகள் பயனடைந்தனர்.

4. தானே புயல் நிவாரணம், வறட்சி, நிவாரணம், வெள்ள நிவாரணம், சம்பா மற்றும் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு, பயிர்க்காப்பீடு என்று கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1 கோடியே 40 லட்சம் விவசாயிகளுக்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக அளிக்கப்பட்டது.

5. சுமார் 1.06 கோடி விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளில் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடன் வழங்கப்பட்டுள்ளது.

6. 5 ஆண்டுகளில் இரண்டு முறை, விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2016-ல் சுமார் 12 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 5,318 கோடி ரூபாய் கடனும், 2021-ல் சுமார் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 12,110 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

7. ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் 60 ஆண்டுகால கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 1,652 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு, 24,468 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

8. விவசாய பம்பு செட்டுகளுக்கு இந்த ஆண்டு ஏப். 1-ம் தேதி முதல் 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

9. நெல் ஜெயராமன் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் உருவாக்க நடவடிக்கை என,

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசு வேளாண் துறையில் அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

1. உணவு தானிய உற்பத்தியில் 5 முறை கிருஷி கர்மான் என்ற மத்திய அரசின் உயர்ந்த விருதினைப் பெற்று சாதனை.

2. மத்திய அரசின் நீர் மேலாண்மைக்கான சிறந்த மாநில விருதைப் பெற்று தமிழகம் முதலிடம்.

3. நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.

4. கூட்டுப் பண்ணையம், நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் மற்றும் நுண்ணீர் பாசனம் போன்ற முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியமைக்காக 2019-2020 ஆம் ஆண்டில் 'ஸ்கோட்ச் குழுமத்தின் தகுதிச் சான்றிதழை' தமிழக அரசு பெற்றுள்ளது.

5. காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

தற்போதைய திமுக அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும், குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, வரகூரைச் சேர்ந்த விவசாயி வீரமணி, தனது 9 ஏக்கர் நிலத்தில், 7 ஏக்கரில் தனியாரிடம் இருந்து ஏ.டி. 36 ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்துள்ளதாகவும், மீதமுள்ள 2 ஏக்கருக்கு, செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோ-51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார் செய்து விதைத்ததாகவும், ஏறத்தாழ விதைத்து 12 நாட்களாகியும் திமுக அரசு வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை என்று விவசாயி வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி வீரமணி, வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. அரசின் அலட்சியத்தால் பாதிப்படைந்துள்ள விவசாயி வீரமணிக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். மேலும், வீணாகிய விதை நாற்றுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

அதேபோல், வேறு எங்கேனும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு, எதிர்வரும் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு, தரமான விதை நெல்களை தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசௌ வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x