Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் சென்னையில் பழனிசாமி தனியாக ஆலோசனை

சென்னை மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.

அதிமுகவை கைப்பற்றப் போவதாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகி வருகிறது. கட்சியில் இருந்து அத்தகைய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு வரை கூட்டாக அறிக்கை வெளியிட்டு வந்த இருவரும் தற்போது அறிக்கை, கடிதங்களை தனித்தனியாக வெளியிடுகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று காலை 11.30 மணிக்கு வந்து, மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஜெயக்குமார், கோகுல இந்திரா, சின்னையா, பா.வளர்மதி, பி.சத்யா, விருகை ரவி, பாலகங்கா, கே.பி.கந்தன், ஆதிராஜாராம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இக்கூட்டம் மதியம் 2 மணி வரை நீடித்தது.

அதிமுக கட்சி தொடங்கி 50-வது ஆண்டு தொடங்க உள்ளதால், புதிய உறுப்பினர்களை இணைப்பது, சென்னையில் விழா எடுப்பது, சென்னையில் கட்சியை பலப்படுத்துவது, சசிகலா ஆடியோ விவகாரம் ஆகியவை குறித்து இதில் பேசப்பட்டதாக தெரிகிறது.

அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளிடம் சசிகலா தொடர்ந்து பேசிவருவதால், கட்சியின் கிளை பேரவைகள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் மாவட்டச் செயலாளர்கள் சுமுக போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று பழனிசாமி அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இல்லாமல் மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் பழனிசாமி கடந்த ஜூன் 4-ம் தேதி தனியாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x