

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக, சமூகநலத்துறை இன்று (ஜூலை 01) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"2021-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனமாக இருத்தல் வேண்டும். தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வரப் பெற வேண்டும்.
மாநில அளவிலான உயர் மட்டக்குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விருதுக்கு தகுதியான தனிநபர் மற்றும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ்-2 மற்றும் ஆங்கிலத்தில்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு புகைப்படத்துடன் பெறப்பட வேண்டும்.
எனவே, அனைத்து மாவட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் அணுகி வருகின்ற 12.07.2021-க்குள் கருத்துருக்கள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுகின்றன.