Last Updated : 01 Jul, 2021 04:13 PM

 

Published : 01 Jul 2021 04:13 PM
Last Updated : 01 Jul 2021 04:13 PM

காளையார்கோவில் அருகே ஒரே நாளில் சேதமான புதிய தார்ச்சாலை; எதிர்ப்பையும் மீறி அமைத்ததால் அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

காளையார்கோவில் அருகே ஊத்துப்பட்டியில் ஒரே நாளில் சேதமடைந்த புதிய தார்ச்சாலை.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை ஒரே நாளில் சேதமடைந்தது. எதிர்ப்பையும் மீறி சாலை அமைத்ததால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணியில் இருந்து மருதக்கண்மாய், ஊத்துப்பட்டி, ஒட்டாணம் வழியாக, காளக்கண்மாய் நெடுஞ்சாலை செல்கிறது. இந்நிலையில், நேற்று இரவு (ஜூன் 30) நெடுஞ்சாலைத்துறை சார்பில் மருதக்கண்மாயில் இருந்து ஒட்டாணம் வரை 2 கி.மீ-க்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

ஏற்கெனவே உள்ள சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு, ஜல்லிக்கற்கள் பரப்பாமலேயே புதியச் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை தரமின்றி இருப்பதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் இரவோடு, இரவாக சாலை அமைத்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 01) காலை அவ்வழியாக வாகனங்கள் சென்றபோது சாலை ஆங்காங்கே சேதமடைந்தது. இதையடுத்து, சாலையை ஆய்வு செய்யச் சென்ற சாலை ஆய்வாளரிடம் கிராமமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

இது குறித்து, ஒட்டாணத்தைச் சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில், "சாலை அமைக்கும்போதே தரமில்லையென புகார் தெரிவித்தோம். ஆனால், கண்டுகொள்ளாமல் சாலையை அமைத்தனர். சாலை தரமில்லாததால், கையில் பெயர்த்து எடுத்தாலே சாலை வந்துவிடுகிறது. சாலை அமைத்த ஒரே நாளில் ஆங்காங்கே பெயர்ந்து பள்ளமாக மாறிவிட்டது. இதனால், வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர்" என்றனர்.

இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மருதுபாண்டியன் கூறுகையில், "ஒப்பந்ததாரிடம் சாலையை தரமாக அமைக்கத் தெரிவித்துள்ளேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x