Published : 01 Jul 2021 04:00 PM
Last Updated : 01 Jul 2021 04:00 PM

ஆயுள் கைதி முன் விடுதலை; தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை

10 ஆண்டுகள் சிறை தண்டனையை பூர்த்தி செய்யாதவரை எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா திட்டத்தில் முன் விடுதலை செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த ஏ.பழனிசாமி என்பவர் கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் கைதாகிய நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நிலையில், சேலம் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்வது என 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழக அரசு முடிவெடுத்தது. இதில் பல கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அதில் பழனிசாமி விடுதலை செய்யப்படவில்லை, தான் முன் விடுதலை செய்யப்படாததால், தன்னையும் முன் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிடக்கோரி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடந்த ஆண்டு மே மாதம் பிறப்பித்த தீர்ப்பில் பழனிசாமியை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் உள்துறை தரப்பில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, 10 ஆண்டு தண்டனை காலத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே அந்த அரசாணை பொருந்தும் எனவும், மனுதாரர் 9 ஆண்டுகள் 24 நாட்களை மட்டுமே தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அனுபவித்துள்ளதாகவும், அவரை விடுதலை செய்வதற்கு 349 நாட்கள் குறைவாக இருப்பதால் விடுதலை செய்யப்படவில்லை என வாதிட்டார்.

தண்டனை வழங்கபடுவதற்கு முன்பு விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் தவறாக சேர்த்துக்கொண்டு பழனிசாமி கோரிக்கை வைப்பதாக சுட்டிக்காட்டினார். எனவே பழனிசாமியை விடுதலை செய்ய வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x