Last Updated : 01 Jul, 2021 03:05 PM

 

Published : 01 Jul 2021 03:05 PM
Last Updated : 01 Jul 2021 03:05 PM

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கத் தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.

பழனியைச் சேர்ந்த ராமசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என அழைத்து வருகிறது. திமுக அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என்றே அழைத்து வருகின்றனர். இந்த செயல்பாடு தமிழகத்தில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி கொடுத்தது போல் அமையும். மேலும், ஜம்மு- காஷ்மீர் போல் பிரிவினைக்கும் வாய்ப்பாக அமையும். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சட்டப்பேரவையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது தொடர்பாக பாஜக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் பதிலளிக்கையில், மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சமூக குற்றமில்லை. தொடர்ந்து அவ்வாறு தான் அழைப்போம் என தெரிவித்தார். இதனால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே, தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகள், உரைகளில் மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், அரசின் அறிவிப்புகள், உத்தரவுகள் மற்றும் உரைகளில் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசை அழைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே உள்ளன. அவ்வாறு இருக்கையில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கரோனா தடுப்பூசி போடுமாறு யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அவ்வாறு இருக்கும் போது இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்?

மாநில முதல்வரும், அமைச்சர்களும் இப்படித்தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்த மனு மூலம் மனுதாரர் தமிழக மக்களுக்கு எதைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறார் எனத் தெரியவில்லை. மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x