Published : 01 Jul 2021 02:14 PM
Last Updated : 01 Jul 2021 02:14 PM

விலைவாசி உயர்வைக் கண்டித்து ஜூலை 5-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்:  மதுரையில் பிரேமலதா பேட்டி

மதுரை

விலைவாசி உயர்வைக் கண்டித்து ஜூலை 5-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் மறைந்த தேமுதிக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று மதுரை வந்தார்.

அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு பொதுமக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.

அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், தேமுதிகவை பொறுத்தவரையில் வெற்றியைக் கண்டு ஆணவப்படுவதோ, தோல்வியைக் கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல.

வலுவான கட்டமைப்புகளை உள்ளடக்கிய வலுவான கட்சி தேமுதிக. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு நிறைய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.

எங்களது திருமணம் கருணாநிதி தலைமையில் நடந்தது இந்த உலகத்துக்கே தெரியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனான நட்புறவு என்றைக்கும் இருக்கும்.

சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசுவது அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம், அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முதலில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பின்பு கட்சியின் ஆலோசனை கூட்டம் கூட்டி தேமுதிக கட்சியின் நிலையை தலைமை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x