Published : 01 Jul 2021 02:02 PM
Last Updated : 01 Jul 2021 02:02 PM

யூ டியூபர் மதன் ஜாமீன் வழக்கு: காவல்துறை பதிலளிக்க செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனின் ஜாமீன் மனு மீது, பதில் அளிக்க காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூ டியூப் சேனல் மூலம் ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக யூ டியூபர் மதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகம், புளியந்தோப்பு சைபர் கிரைம் காவல் நிலையத்திலும், முதலமைச்சர் தனிப் பிரிவு மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் குவிந்தன.

இந்த புகார்களின் அடிப்படையில் யூ டியூபர் மதன் மீது, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

இந்திய தண்டனை சட்ட பிரிவு 294(பி), 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67, 67ஏ ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணைக்கு ஆஜராகும்படி மதனுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவானார். தனது இருப்பிடத்தை கண்டுபிடிக்காதபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தப்பி வந்தார். அவரைத்தேடி வந்த போலீஸார் அவரது மனைவி, தந்தையைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது மனைவி பெயரில்தான் யூடியூப் இயங்கி வருவதும், மதனுடன் சேர்ந்து யூடியூப் காணொலியில் பேசுவதும் அவர்தான் என்பதும் தெரியவந்ததன்பேரில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தருமபுரியில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை காவல்துறையினர் ஜூன் 18 ஆம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை ஆஜர்படுத்திய போலீஸார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் ஜூன் 28 ஆம் தேதி உத்தரவிட்டது. அவரது மனைவிக்கு மட்டும் 8 மாத கைக்குழந்தையுடன் இருப்பதை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்கியது.

இதனையடுத்து ஜாமீன் கோரி மதன் என்ற மதன்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனவும், பெண்களுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்றும், புகார் அளித்தவர்களை ஏமாற்றவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த வகையிலும் சட்டத்தை மீறவில்லை என்றும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை எனவும், ஏற்கனவே தனக்கு எதிரான வழக்கில் காவல்துறை காவலில் எடுத்து விசாரித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை, எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் கடந்த 13 நாட்களாக சிறையில் இருந்து வருவதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை எனவும், அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் மனு மீது காவல்துறையின் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து மனு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (ஜூலை 5) நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x