Published : 05 Jun 2014 09:37 AM
Last Updated : 05 Jun 2014 09:37 AM

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. மனு தள்ளுபடி

சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடுவுக்கு தங் களுடைய சொத்துகளை முடக்கவோ, வழக்கில் சேர்க்கவோ அதிகாரமில்லை என ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும் ஆஜராகவில்லை.

அதனைத் தொடர்ந்து, ராம ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ்,மெடோ அக்ரோ ஃபார்ம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் சார்பாக வழக்கறிஞர் குலசேகரன் ஆஜரானார்.

‘‘வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள், ஜெய லலிதா, சசிகலா,சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமானது இல்லை. எனவே குற்றம் சாட்டப் பட்டவர்களுடைய சொத்துகள் என வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துகளை விடுவிக்க வேண்டும்''என்றார்.

‘வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இணைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் சொத்துகளை விடுவிக்கக் கூடாது' என அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அதிகாரமில்லை

அதனைத் தொடர்ந்து கடந்த மே 29-ம் தேதி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், ‘‘1996-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடு நியமிக்கப்பட்டார். அவருக்கு வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆராய்ந்து சரியென கையெழுத்திடவோ, நிராகரிக்கவோ அதிகாரமில்லை. எனவே அவர் வழக்கு தொடர் புடைய ஆவணங்களில் கையெ ழுத்திட்டது சட்டப்படி தவறு.

அதேபோல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால் வரின் அசையும் மற்றும் அசையா சொத்து களை முடக்கவோ, அதனை வழக்கில் சேர்க்கவோ அவருக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.

எனவே நல்லம்ம நாயுடு வால் பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களையும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளையும் உடனடியாக வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்''என குறிப் பிடப்பட்டிருந்தது.

அதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங், ‘‘ஒரு வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியை நியமித்து அரசாணை வெளியிடும்போதே,விசாரணை அதிகாரிக்கு அனைத்து விதமான அதிகாரங்களும் வழங்கப்படு கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கை பொறுத்தவரை விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடு விற்கு சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கவும், சோதனை நடத்தவும் உரிய அதிகாரம் இருக் கிறது'' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ''விசாரணை அதிகாரியாக செயல்பட்ட நல்லம்ம நாயுடுவிற்கு சம்பந்தப் பட்டவர்களை விசாரித்து சொத்துகளை முடக்க முழு அதிகாரம் இருக்கிறது'' எனக் கூறி ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x