Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM
சேலம் அரசு மருத்துவமனையில் அதிநவீன குடல் உள்நோக்கு கருவிகள் மூலம் குடல், கணையம், கல்லீரல் சார்ந்த புற்றுநோய்கள், பித்தநாள கற்கள், கணைய கற்களுக்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நவீன கருவிகள் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தலைமை வகித்து, குடல், கணையம், கல்லீரல் சார்ந்த அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளுக்கான அதிநவீன குடல் உள்நோக்கு கருவிகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். துறை தலைவர்கள் சிவசங்கர், பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:
நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம், குடல், கணையம், கல்லீரல் சார்ந்த புற்றுநோய்கள், பித்தநாள கற்கள், கணைய கற்களுக்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்க முடியும்.
மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல் எடை குறைதல், மலத்தில் ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், நோயாளிகள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றக் கொள்ளலாம்.
இச்சிகிச்சையை நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்ட மக்கள் பயன்பெறும் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. இக்கருவிகளின் மூலம் உயரிய அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் மக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT