Published : 01 Jul 2021 03:17 AM
Last Updated : 01 Jul 2021 03:17 AM
தூத்துக்குடியில் தனியார் நிலங்களில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர கழிவுகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் ஸ்டெர்லைட் ஆலையின் கந்தகரசாயன கழிவுகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த கழிவால் ஆற்றில் தண்ணீர் போக்கு திருப்பப்பட்டு தூத்துக்குடி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இது தவிர தனியார் பட்டா நிலங்களிலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாமிர கழிவுகளை கொட்டி வைத்துள்ளது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு அரசு அபராதம் விதித்தது. இந்நிலையில் தற்போது இந்த கழிவுகள் தனியார் சிமெண்ட் நிறுவனத்துக்கு விற்கப்படுகிறது.
உப்பாற்று ஓடையில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றவில்லை. தற்போது தனியார் பட்டா நிலங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாமிர கழிவுகளை விற்க முயற்சிப்பது சட்டவிரோதம். எனவே, ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர கழிவுகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர், உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா?, ஓடையில் காப்பர் கழிவுகளை கொட்டியவர்கள் யார்?, உயர் நீதிமன்றம் 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது வரை ஏன் செயல்படுத்தவில்லை? என்பது குறித்து பொதுப்பணித் துறை செயலர் 12 வாரத்தில் பதிலளிக்க வேண்டும். அதுவரை தனியார் பட்டா நிலங்களில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை வணிக நோக்கத்தில் விற்பனை செய்ய தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT