Published : 30 Jun 2021 04:49 PM
Last Updated : 30 Jun 2021 04:49 PM

தமிழகத்தில் முதல் முறை; திண்டுக்கல்லில் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.20 கோடியில் 1,000 குடியிருப்புகள்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் 

திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கிய அமைச்சர்கள் கே.எஸ்.செஞ்சி மஸ்தான், ஐ.பெரியசாமி. 

திண்டுக்கல் 

தமிழகத்திலேயே முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு முதல் கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 1,000 குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலங்கை அதிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தாலா சரத் வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, இ.பெ.செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர், இலங்கை அகதிகள் முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

முகாமில் தங்கியுள்ளவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, முகாமில் வசிப்பவர்களுக்கு கரோனா நிவாரண உதவிகளாக அரிசி, மளிகைப் பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், "இலங்கை அகதிகள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து, பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்" என்றார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழகத்தில் உள்ள 108 இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து வருகிறோம். தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில்தான் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு முதல் கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 1,000 குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை வக்பு வாரியத்திற்குச் சொந்தமான 7,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் கையகப்படுத்தி வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்படும்.

வக்பு வாரியத்தின் சொத்துகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு உடனுக்குடன் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. சுமார் 7,000 சொத்துகள் வக்பு வாரியத்திற்குச் சொந்தமானவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. சொத்துகள் விவரம் குறித்து ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். முழுமையாக வக்பு வாரிய இடங்கள் கைப்பற்றப்பட்டு முழுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x