பிரதமர் மோடி, அமித்ஷாவைச் சந்திக்கும் புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள்

பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நமச்சிவாயம்
பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நமச்சிவாயம்
Updated on
1 min read

பிரதமர் மோடி, அமித்ஷாவை நாளை புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்கள், ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லியில் சந்திக்கின்றனர்.

புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக அமைச்சரவையில் பாஜக இடம்பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 9 இடங்களில் போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளைக் கைப்பற்றியது. தேர்தலின்போது புதுவைக்கு முக்கியத்துவம் அளித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அர்ஜூன்ராம் மெக்வால், கிஷண்ரெட்டி உட்படப் பலர் பிரச்சாரம் செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல்முறையாக 6 எம்எல்ஏக்களை பாஜக பெற்றுள்ளது. பேரவைத் தலைவர் பதவியும் பாஜவுக்குக் கிடைத்துள்ளது. கடந்த 27-ம் தேதி பாஜகவில் இருந்து அமைச்சர்களாக நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் பதவியேற்றனர்.

இந்நிலையில் பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நமச்சிவாயம், மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் சாய் சரவணக்குமார், தேர்வான எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட், நியமன எம்எல்ஏக்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, பாஜகவை ஆதரிக்கும் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். நாளை (ஜூலை 1) பிற்பகலில் பிரதமர் மோடியைச் சந்திக்கின்றனர். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் நட்டா ஆகியோரையும் சந்தித்துப் பேசுகின்றனர்.

டெல்லி பயணம் தொடர்பாக பாஜக தரப்பில் விசாரித்தபோது, "பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியான பெஸ்ட் புதுவையை உருவாக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் புதுவைக்குப் பல வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கித்தர வேண்டும் என்றும் இச்சந்திப்பில் வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in