Published : 30 Jun 2021 12:22 PM
Last Updated : 30 Jun 2021 12:22 PM

புதிய குடும்ப அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் பணி தொடக்கம்; மீண்டும் கைவிரல் ரேகை முறை: அரசு அறிவிப்பு

கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் பணி, ஆய்வுப் பணி, புதிய அட்டைகள் அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4000/- இரு தவணைகளில் ரூ.2000/- வீதம் மே 2021 மற்றும் ஜூன் 2021 மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. மேலும் ஜூன் 2021 மாதத்தில் நிவாரணத் தொகை ரூ.2000/-உடன் 14 மளிகைப் பொருட்கள் வழங்கவும் ஆணையிடப்பட்டது.

இதனைப் பெற நியாய விலைக் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும்போது ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்புப் பையினையும் பெற்றுச் செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.

புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக களப் பணியாளர்களால் விசாரணைக்குச் செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிவாரண உதவித்தொகை 98.59 சதவீதம், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால், 01.07.2021 முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் பதிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x