சேலத்தில் மீட்கப்பட்ட நட்சத்திர ஆமை உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு

சேலம் சூரமங்கலம் பகுதியில் வனத் துறையினரால் மீட்கப்பட்ட நட்சத்திர ஆமை.       படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம் சூரமங்கலம் பகுதியில் வனத் துறையினரால் மீட்கப்பட்ட நட்சத்திர ஆமை. படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் வீட்டின் அருகே வந்த அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டது.

சேலம் சூரமங்கலம் அருகே ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமானுஜம் என்பவர் வீட்டின் அருகே நேற்று காலை ஆமை ஒன்று ஊர்ந்து வந்தது.

அவர் அதனைப் பிடித்துப் பார்த்தபோது, அரியவகையான நட்சத்திர ஆமை என்பது தெரிந்தது. இதையடுத்து, அவர் அஸ்தம்பட்டியில் உள்ள சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தலைமையிடத்து வனவர் சண்முகசுந்தரம் தலைமையில் வந்த வனத்துறையினர், ராமானுஜம் வீட்டில் இருந்த நட்சத்திர ஆமையை மீட்டனர். தொடர்ந்து, அந்த அமை சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டது.

இது குறித்து சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சின்னதம்பி கூறுகையில், அரிய வகையான நட்சத்திர ஆமைகள் மலைசார்ந்த பகுதிகளில் காணப்படும். ஏற்காடு மலை அடிவாரம் என்பதால், மலைப்பகுதியில் இருந்து, இங்கு வந்திருக்கலாம். சேலம் சூரமங்கலம் பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. பல்வேறு பகுதியில் இருந்து மீன் மார்க்கெட்டுக்கு மீன், நண்டு உள்ளிட்டவை விற்பனைக்கு எடுத்து வரப்படுகின்றன. கடலிலும் வாழக்கூடிய நட்சத்திர ஆமை, மீன்களுடன் வலையில் சிக்கி, இங்கு வந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in