

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட, 3-வது கொள்ளையனும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.
சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், தரமணி, பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறிவைத்து கும்பல் ஒன்று நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது.
கடந்த 15-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் அடுத்தடுத்து சுமார் ரூ.1 கோடி வரை இந்த கும்பல் கொள்ளையடித்தது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கொள்ளையர்களைப் பிடிக்க தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் மேற்பார்வையில் தியாகராயநகர் காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் கொள்ளை தொடர்பாக ஹரியாணா மாநிலம், பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷ் (37) என்ற கொள்ளையனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த வீரேந்திர ராவத் (23) என்ற மற்றொரு கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
இருவரும் ஹரியாணாவிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு இங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்தக் கொள்ளையில் தொடர்புடைய 3-வது கொள்ளையனான நஜிம் உசைனையும் போலீஸார் கைது செய்தனர். அவரை சென்னை தனிப்படை போலீஸார் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். தலைமறைவாக உள்ள மற்ற கொள்ளையர்களை கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார் ஹரியாணா மற்றும் டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.