Published : 30 Jun 2021 03:14 AM
Last Updated : 30 Jun 2021 03:14 AM

கிராமப்புற தொழில் முனைவோர் கடனுதவி திட்டத்தில் 656 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி கடன்: ஊரக தொழில் துறை அமைச்சர் வழங்கினார்

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

திருப்போரூர்

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராமப்புற தொழில் முனைவோர் கடன் உதவி திட்டத்தில் 656 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி மதிப்பிலான கடனுதவிகளை, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் கடன் உதவி மற்றும் பல்வேறு அரசுத் துறை சார்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அவர் கிராமப்புற தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் ரூ.1.13 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை 280 பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் தொழில் முனைவோருக்கான கடனாக ரூ.6.40 லட்சம் கடனுதவிகளை 15 பயனாளிகளுக்கும், மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நலத் துறைசார்பாக சிறு தொழில் மேற்கொள்வதற்காக மானியத்துடன் கூடிய ரூ.30 லட்சம் கடனுதவிகளை 321 பயனாளிகளுக்கும் அமைச்சர் வழங்கினார்.

சிமென்ட் சாலை

மேலும், உங்கள் தொகுதியில் முதல்வர் மனு மீது தீர்வு காணப்பட்டு சிமென்ட் சாலை அமைப்பதற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மகளிர்திட்ட இயக்குநர் தர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லலிதா மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x