பாளை சிறைக் கைதி கொலை வழக்கு: சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

பாளை சிறைக் கைதி கொலை வழக்கு: சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பாளையங்கோட்டை சிறையில் கொலையான கைதியின் உடலை 69 நாட்களாக வாங்காமல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை வாகைகுளத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவரைக் கொலை மிரட்டல் வழக்கில் போலீஸார் கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். ஏப்ரல் 22-ம் தேதி பாளையங்கோட்டை சிறையில் முத்து மனோ அடைக்கப்பட்டார். அன்று சிறையில் கைதிகள் இடையே நடைபெற்ற மோதலில் முத்து மனோ கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் முத்து மனோ கொலை தொடர்பாகச் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நீதி விசாரணை நடத்தவும், ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு அவரது தந்தை பாபநாசம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முத்து மனோவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை உடலை உறவினர்கள் வாங்காமல் உள்ளனர்.

இந்நிலையில் பாபநாசம் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''உயர் நீதிமன்றம் கெடு விதித்தும் முத்து மனோவின் உடலை உறவினர்கள் வாங்கவில்லை. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர். உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்காவிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து, நெல்லை மாநகரக் காவல் ஆணையர், நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நெல்லை மற்றும் வாகை குளத்தில் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in