Published : 29 Jun 2021 03:15 PM
Last Updated : 29 Jun 2021 03:15 PM

வேட்பாளர் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யக் கோரி வழக்கு: தேர்தல் ஆணைய பதிலை அடுத்து வழக்கு முடித்துவைப்பு

சென்னை

வேட்பாளர்கள் தொடர்பான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழக்கை முடித்து வைத்துள்ளது.

தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 2ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. அதேபோல கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை அங்கீகரித்து அரசியல் கட்சிகள் வழங்கிய சான்றுகள், முடிவுகள் இன்னும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனக் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், ''தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் தேர்தலை எதிர்த்து தேர்தல் வழக்குத் தொடர, அவர்களைத் தங்கள் கட்சி வேட்பாளராக அங்கீகரித்து அரசியல் கட்சிகள் அளித்த சான்று மற்றும் முடிவுகள் குறித்த ஆவணங்கள் அவசியம் என்பதால் இந்த ஆவணங்களை ஜூலை 15ஆம் தேதிக்கு முன் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஆவணங்களைச் சம்பந்தப்பட்டவர்கள் விண்ணப்பித்துப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தேவையான ஆவணங்களை மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அந்த ஆவணங்களை விரைந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x