Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்கள் அனைத்தும் 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், அர்ச்சகர்கள் மட்டும் ஆகம விதிகளின்படி சுவாமிக்கு பூஜைகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்யலாம் என்றுதமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து கோயில்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வவர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜப் பெருமாள், காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் உள்ளிட்ட கோயில்கள் திறக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில், வீரராகவபெருமாள் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள்திறக்கப்பட்டன. இந்த கோயில்களில், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தொடங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT