Published : 28 Jun 2021 07:05 PM
Last Updated : 28 Jun 2021 07:05 PM

கடன் தொல்லையால் குடும்பத்தினரைக் கொலை செய்த ஜவுளிக்கடை அதிபர்; தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

கடன் தொல்லையால் தனது தாயார், மனைவி, மகள், மகன் எனக் குடும்பத்தினரைக் கொலை செய்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் நந்தனார் தெரு, ரங்கநாதன் அடுக்குமாடிக் குடியிருப்பில் தாமோதரன் வசித்து வந்தார். இவர் பம்மல் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் சுமை அதிகரித்ததால், விரக்தியில் இருந்த அவர், 2017 டிசம்பர் 12ஆம் தேதி மனைவி தீபா, ஏழு வயது மகன் ரோஷன், நான்கு வயது மகள் மீனாட்சி, தாய் சரஸ்வதி ஆகியோரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.

இதில், தாமோதரன் தவிர மற்றவர்கள் உயிரிழந்தனர். உயிர் பிழைத்த தாமோதரனுக்கு எதிரான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், அவருக்குத் தூக்கு தண்டனை விதித்து 2020ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேசமயம் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாமோதரனும் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் முகமது சைபில்லாஹ், காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, தாமோதரனைக் குற்றவாளி எனத் தீர்மானித்த தீர்ப்பை உறுதி செய்தது. அதேசமயம், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததுடன், 25 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனத் தீர்ப்பளித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x